Monthly Archives: November 2016

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – பெரிய நம்பி

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆளவந்தார்

பராசரனும் வ்யாசனும் பாட்டியின் வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுடன், கையில் ஒரு பரிசுடன் அத்துழாயும் வருகிறாள்.

பாட்டி : இங்கு என்ன பரிசு வென்றாய் கண்ணே?

வ்யாஸ : பாட்டி, எங்களுடைய பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் அத்துழாய் ஆண்டாள் வேடமிட்டு, திருப்பாவையிலிருந்து சில பாடல்கள் பாடினாள், முதல் பரிசும் வென்றாள்.

பாட்டி : மிக நன்று அத்துழாய்! நீ பாடிய அப்பாசுரங்களை இன்று நான் உங்களுக்குப் பெரிய நம்பியைப் பற்றிச் சொன்னபின்பு கேட்கப் போகிறேன்.

வ்யாசன், பராசுரன், அத்துழாய் மூவரும் ஒன்றாக: இளையாழ்வாரைப் பற்றியும் கூட, பாட்டி!

பாட்டி : ஆமாம். நான் சென்ற முறை சொன்னது போலே, பெரிய நம்பி ஆளவந்தாருடைய பிரதம சிஷ்யர்களில் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர். அவர்தாம், இளையாழ்வாரை காஞ்சீபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வந்தவர். ஒருபுறம் பெரிய நம்பி இளையாழ்வாரைக் காண காஞ்சிக்குப் பயணிக்க, மறுபுறம் இளையாழ்வாரோ பெரிய நம்பியைக் காணும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்குப் புறப்பட்டார்.

பராசர : பாட்டி, இளையாழ்வார் காஞ்சீபுரத்தில் யாதவ ப்ரகாசரிடத்தில் சிஷ்யராயிருக்கையில், அவர் ஏன் ஸ்ரீரங்கத்திற்குப் புறப்பட்டார்?

பாட்டி : மிக நல்ல கேள்வி! ஆளவந்தார், திருக்கச்சி நம்பியை இளையாழ்வாருக்குத் தேவை ஏற்படும் சமயத்தில் தகுந்த வழி காட்டும்படி பணித்தார் என்று நான் சென்ற தடவை சொன்னது நினைவிருக்கிறதா? இளையாழ்வருக்குத் தம்முடைய குரு யாதவ ப்ரகாசருடைய கருத்துக்களில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்க, அவர் மனத்தில் எழுந்த பல சந்தேகங்கள் கருமேகங்கள் போன்று மறைக்க, அவர் திருக்கச்சி நம்பியை அது குறித்து அணுகினார். பின்பு திருக்கச்சி நம்பி அதை பற்றி யாரிடம் கேட்பார்?

அத்துழாய் : தேவப் பெருமாள்!

பாட்டி : அற்புதம்! இளையாழ்வாருக்கு எப்பொழுதும் அபயம் அளித்து வந்த தேவப் பெருமாள்தான் அவரை பெரிய நம்பியிடம் சென்று, பெரிய நம்பியிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு அவரின் சிஷ்யராகும்படி கூறினார். இரவின் இருளை காலையில் உதிக்கும் சூரியக் கிரணங்கள் போக்குவது போன்று, இளையாழ்வாரின் மனத்தில் இருந்து வந்து சந்தேகங்களைப் போக்கினார். இவ்வாறாக இளையாழ்வார் காஞ்சிக்குப் புறப்பட, பெரிய நம்பி இளையாழ்வாரைக் காணும் பொருட்டு காஞ்சிக்கு ப்ரயாணம் செய்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் மதுராந்தகம் என்னும் இடத்தில் சந்தித்துக் கொள்ள, பெரிய நம்பி இளையாழ்வாருக்கு அங்கேயே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, அவரை நம் சம்பிரதாயத்தில் கொணர்ந்தார்.

வ்யாச : அட ஆமாம், அங்கேதானே நம்முடைய மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் இருக்கிறது. போன விடுமுறைக்கு அங்கே சென்றிருந்தோமே! ஆனால், அவர் ஏன் இளையாழ்வாரை சம்பிரதாயத்திற்குள் அழைத்து வர காஞ்சிக்கோ ஸ்ரீரங்கத்திற்கோ செல்லவில்லை ? ஏன் அதனை அங்கே மதுராந்தகத்திலேயே செய்தார்?

பெரிய நம்பி – ஸ்ரீரங்கம்

பாட்டி: பெரிய நம்பி, இளையாழ்வாரின் மீது மிகுந்து அபிமானமும் அன்பும் கொண்டிருந்த ஒரு சிறந்த ஆசார்யர். அவர் இது போன்ற நல்ல செயல்களை தாமதிக்கலாகாது என்பதனை அறிந்திருந்தார்; இளையாழ்வாருக்கும் அதே உணர்வு. குழந்தைகளே, இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன, நம்முடைய சம்பிரதாயத்திற்கு ஸம்பந்தப்பட்ட எந்த நல்ல செயல்களையோ, கைங்கர்யங்கள் செய்வதையோ நாம் காலம் தாழ்த்தவே கூடாது என்பதே! எவ்வளவு சீக்கிரம் செய்கிறோமோ, அவ்வளவு நல்லது. பெருமாளுடைய பக்தர்களிடையே வேறுபாடு பார்க்காமல், ஒவ்வொருவருடனும் அன்புடனும் மதிப்புடனும் நடப்பதே நம்முடைய சம்பிரதாயத்தின் உட்கருத்தாகும்; இதனைப் பெரிய நம்பி அறிந்தவர். அவர் தம்முடைய சிஷ்யரான ராமானுஜர் மீது மிகுந்து அன்பு கொண்டிருந்தார்; நம்முடைய சம்பிரதாயத்தின் விடிவெள்ளியான ராமானுஜருக்காக உயிர் துறக்கும் அளவுக்கு!

வ்யாச : அவர் உயிரைத் தியாகம் செய்தாரா? எதற்காக அவ்வாறு செய்தார் பாட்டி?

பாட்டி : ஒரு சமயம், தன்னுடைய ஆணைகளை ஒப்புக்கொள்வதற்காக ராமானுஜரை சைவ அரசன் தன்னுடைய அரசவைக்கு வருமாறு சொன்னான். ராமானுஜருக்குப் பதிலாக அவருடைய சிறந்த சிஷ்யர்களில் ஒருவரான கூரத்தாழ்வான், தம்முடைய ஆசார்யர் போல கோலம் பூண்டு வயதில் மிகவும் முதிர்ந்த பெரிய நம்பியுடன் அரசவைக்குச் சென்றார். பெரிய நம்பி தம்முடன் தம் மகளையும் அழைத்து சென்றார்; அவள் பெயர் அத்துழாய்!

அத்துழாய் : என் பெயரும் அதுவேதான் !

பாட்டி : ஆமா, அதே தான்! அரசன் தன்னுடைய ஆணைகளுக்குப் பணியுமாறு சொல்ல, பெரிய நம்பியும் கூரத்தாழ்வானும் அவனுடைய ஆணைக்குப் பணிய மறுத்தனர். அரசன் மிகுந்த சினம் கொண்டு, அவர்களுடைய கண்களை பிடுங்குமாறு ஆணையிட்டான். வயதில் மிகவும் முதியவரான பெரிய நம்பி வலி பொறுக்கமுடியாமல் கூரத்தாழ்வானின் மடியில் சாய்ந்து, ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உயிரை நீத்து, பரமபதத்தை அடைந்தார். இவ்வுயர்ந்த ஆத்மாக்கள் எதனை பற்றியும் கவலைப்படாமல், ஒரு முத்து ஹாரத்தின் நடுவில் பதித்த மாணிக்கம் போன்ற ராமானுஜரைக் காப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்தார்கள்? ஒரு ஹாரத்தில் உள்ள முத்துக்களைச் சிதைத்தால் என்னவாகும் ?

பராசரனும் வ்யாசனும் (ஒரே குரலில்): ஹாரமும் சிதைந்து போகும்!

பாட்டி : மிகச்சரி! அது போலத்தான், ராமானுஜர் நம்முடைய ஸம்பிரதாயமான ஒரு முத்து ஹாரத்தின் நடுவில் பதித்த மாணிக்கமாக இருந்தாலும், அனைத்து ஆசார்யர்களும் ஹாரத்தில் இருக்கும் முத்துக்களைப் போல, ஹாரத்தை ஒருங்கே தாங்கி அதன் நடுவில் உள்ள மாணிக்கத்தைக் கவனமாகக் காத்தனர். ஆகையால், நம்முடைய ஆசார்யர்களிடம் நாம் எப்பொழுதும் கடன் பட்டவர்களாவோம்; அவர்களுடைய வாழ்வை நினைத்து மிகுந்த பக்தியோடும் இருக்க வேண்டும்!

பராஸர : பாட்டி, கூரத்தாழ்வானுக்கு என்னவாயிற்று?

பாட்டி : கூரத்தாழ்வான், தம்முடைய கண்களை இழந்தவராய் ஸ்ரீரங்கத்திற்குத் திரும்பினார். அவர் ராமானுஜருடைய சிறந்த சிஷ்யர்களில் ஒருவர்; அவர் வாழ்ந்த காலத்தில் ராமானுஜருடனே எப்பொழுதும் இருந்தார். கூரத்தாழ்வானைப் பற்றியும் ராமானுஜரை பற்றியும் மேலும் உங்களுக்கு அடுத்த முறை நாம் சந்திக்கும் பொழுது சொல்வேன். இப்பொழுது, வேகமாக வீட்டிற்க்குச் செல்லுங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்புறம் அத்துழாய், திருப்பாவைப் பாசுரங்களை நீ சொல்லி அடுத்த முறை நான் கேட்கிறேன்.

குழந்தைகள் பெரிய நம்பியைப் பற்றியும் கூரத்தாழ்வானைப் பற்றியும் எண்ணிக் கொண்டே வீடுகளுக்குத் திரும்பினர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-periya-nambi/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

ஸ்ரீ வைஷ்ணவம் – பால பாடம் – ஆளவந்தார்

Published by:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பிகளும்

வ்யாசனும் பராசரனும் தங்கள் தோழி அத்துழாயுடன் ஆண்டாள்   பாட்டியின் வீட்டில் நுழைகிறார்கள். ஆண்டாள் பாட்டி தன் கைகளில் பிரசாதத்துடன் அவர்களை வரவேற்கிறார்.

பாட்டி : வா அத்துழாய்! கைகளை அலம்பிக்கொண்டு இந்த பிரசாதத்தை பெற்றுக் கொள். இன்று உத்திராடம், ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம்.

பராசர : பாட்டி, போன முறை நீங்கள் எங்களுக்கு யமுனைத்துறைவரைப் பற்றிக் கூறுவதாகச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா?

பாட்டி : ஆமாம்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீங்கள் நம்முடைய சிறந்த ஆசார்யர் பற்றி ஞாபகமாய் கேட்பது எனக்கு மகிழ்வளிக்கிறது. இன்று அவரது திருநக்ஷத்ரம். அவருடைய மேன்மைகளைப் பற்றிப் பேசி அறிந்து கொள்ளத் தக்க தருணமே.

வ்யாச : ஆனால் பாட்டி, ஆளவந்தாருடைய திருநக்ஷத்ரம் என்றல்லவா கூறினீர்கள்?

 ஆளவந்தார்காட்டு மன்னார் கோயில்

பாட்டி : ஆமாம். காட்டு மன்னார் கோயிலில் அவதரித்த யமுனைத்துறைவர் பிற்காலத்தில் ஆளவந்தார் என்று பிரசித்தி பெற்று விளங்கினார். அவருடைய தகப்பனார் பெயர் ஈச்வர முனி என்பதாகும். ஆளவந்தார் நாதமுனிகளின் பேரனாவார். இவர் மஹாபாஷ்ய பட்டரிடம் கல்வி பயின்றார். அவர் ஆளவந்தார் என்று சிறப்பாக அழைக்கப்பட்டதற்கு சுவாரஸ்யமான சரித்திரம் ஒன்று உண்டு. அக்காலத்தில் பண்டிதர்கள்,  தலைமைப் பண்டிதருக்கு வரி செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. அவ்வாறு, அரச புரோஹிதர் ஆக்கியாழ்வான், தம்முடைய பிரதிநிதிகளை எல்லாப் பண்டிதர்களிடமும் அனுப்பி தமக்கு வரி செலுத்துமாறு செய்தி அனுப்பினார். மஹாபாஷ்ய பட்டர் இத்தகவலால் கவலையுற்றிருக்க யமுனைத்துறைவர் தாம் அதனை கவனித்துக் கொள்வதாக கூறினார். “மலிவான விளம்பரம் தேடும் புலவர்களை அழிப்பேன்” என்று பொருள் படும் ஒரு ச்லோகச் செய்தியை அனுப்பினார்! இந்த செய்தியைக் கண்டு ஆக்கியாழ்வான் சினம் கொண்டு யமுனைத்துறைவரை அரசவைக்கு அழைத்து வருமாறு பணித்தார். யமுனைத்துறைவரோ தமக்கு உரித்த மரியாதைகளை அளித்தால் மாத்திரமே வருவதாகக் கூறினார். எனவே, அரசுனும் பல்லக்கு அனுப்ப யமுனைத்துறைவரும் அரசவைக்கு வந்து சேர்ந்தார். விவாதம் தொடங்கும் முன்பு, பட்டத்து அரசி அரசனிடம் யமுனைத்துறைவரே உறுதியாக வெல்வார் என்றும் அவர் தோற்று விட்டால், அவள் தான் அரசுனுடைய சேவகியாக இருப்பாள் என்றும் கூறினாள். அரசனோ, ஆக்கியாழ்வானே வெல்வார் என்று உறுதியாக எண்ணியிருந்ததால், ஒருகால் யமுனைத்துறைவர் வென்றாரானால், தமது ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்குக் கொடுப்பதாகவும் கூறினான். இறுதியில் தம்முடைய ஞானத்தின் வன்மையினால், யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வானை வாதத்தில் வென்றார். ஆக்கியாழ்வானும் யமுனைத்துறைவர் பால் ஈர்க்கப்பட்டவராய், அவருக்கே சிஷ்யரானார். அவர் தோற்றிருந்தாரானால், அரசி ஒரு சேவகியாகியிருக்க வேண்டுமல்லவா – அதிலிருந்து அவளைக் காத்ததால், அவருக்கு “ஆளவந்தார்” என்று அரசி பெயரிட்டழைத்தாள், அவளும் அவருக்கு சிஷ்யையானாள். அரசன் வாக்களித்தபடி அவருக்கு ராஜாங்கத்தில் பாதியும் கிடைத்தது.

வ்யாச : பாட்டி, யமுனைத்துறைவருக்கு நாட்டில் பாதி கிடைத்திருந்தால், அவர் அரசாட்சியல்லவா செய்திருப்பார். நம்முடைய சம்பிரதாயத்தில் எவ்வாறு ஈடுபட்டார்?

அத்துழாய் : அவரை சம்பிரதாயத்தில் அழைத்துக் கொண்டு வந்தவர் உய்யக்கொண்டாருடைய சிஷ்யரான மணக்கால் நம்பியாவார். உய்யக்கொண்டாருடைய சொற்படியே ஆளவந்தாரை நம்முடைய சம்பிரதாயத்தில் ஈர்க்கும் முயற்சியை மணக்கால் நம்பி மேற்கொண்டார்.

பாட்டி : அற்புதம் அத்துழாய்! மிகச்சரியாகச் சொன்னாய்! இது உனக்கு எவ்வாறு தெரியும்?

அத்துழாய்: என்னுடைய அம்மாவும் ஆசார்யர்களைப் பற்றியும் பெருமாளைப் பற்றியும் எனக்கு கதைகள் சொல்வார்.

பாட்டி : ஸ்ரீ ராமானுஜரை தேவப் பெருமாளின் கடாக்ஷத்துடன் நம்முடைய சம்பிரதாயத்தில் அழைத்து வந்தவர் ஆளவந்தாரே.

பராசர : ஆனால் பாட்டி, தேவப்பெருமாள் எவ்வாறு ஆளவந்தாருக்கு உதவினார்?

பாட்டி : அது காஞ்சீபுரத்தில் நடந்தது; அங்கே ஆளவந்தார் இளையாழ்வாரை வரதராஜப் பெருமாள் கோயிலில் கண்டார். அப்பொழுது அவர் ராமானுஜர் என்று பெயர் பெறவில்லை . இளையாழ்வார் அவருடைய குருவான யாதவப் பிரகாசரிடம் பயின்று வந்தார். ஆளவந்தார் தேவப்பெருமாளிடம் இளையாழ்வாரை சம்பிரதாயத்திற்கு அடுத்த தலைவராக ஆக்கிக் கொடுக்கும்படி பிரார்த்தித்தார்.  ஆக, ஒரு தாய் தன் குழந்தைக்கு பரிவூட்டி வளர்ப்பது போன்றே, தேவப்பெருமாளே இளையாழ்வாரை வளர்த்தார். இத்தகைய மேன்மையான ஆளவந்தாருடைய அனுக்கிரகத்தினாலேயே, இளையாழ்வார் சம்பிரதாயத்திற்கு மேன்மையிலும் மேன்மையான கைங்கர்யங்கள் பிற்காலத்தில் புரிந்தார். மேலும் ஆளவந்தார் இளையாழ்வாருக்குத் தேவை எழும் நேரத்தில் வழிகாட்டியாக இருக்கும்படி திருக்கச்சி நம்பியையும் பணித்தார். திருக்கச்சி நம்பியை நினைவிருக்கிறதா?

வ்யாச : ஓ! அவர்தானே பாட்டி தேவப் பெருமாளுக்கு திருவாலவட்ட (விசிறி) கைங்கர்யம் செய்து கொண்டும், தேவப்பெருமாளிடமும் தாயாரிடமும் உரையாடிக் கொண்டிருந்தவர்? நாமும் திருக்கச்சி நம்பியைப் போன்றே பெருமாளிடம் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படியானால் ஆளவந்தாரும் இளையாழ்வாரும் சந்தித்துக் கொண்டார்களா? ஆளவந்தார் இளையாழ்வாரைத் தம்முடைய சிஷ்யராக ஏற்றுக் கொண்டாரா?

பாட்டி : துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை ! இளையாழ்வார் ஆளவந்தாரிடம் சிஷ்யராகும் பொருட்டு ஸ்ரீரங்கத்தை வந்து அடையும் முன்பே, ஆளவந்தார் இவ்வுலகைத் துறந்து பரமபதத்தை அடைந்து விட்டார். அவர்களால் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள இயலவில்லையென்றாலும், இளையாழ்வார் ஆளவந்தாருடைய எண்ணங்களைத் தாம் நிறைவேற்றுவதாக பிரதிக்ஞை மேற்கொண்டார். குழந்தைகளே, நான் உங்களை அடுத்த முறை சந்திக்கும்பொழுது ஆளவந்தாருடைய சிஷ்யர்களில் ஒருவரும், பிற்காலத்தில் இளையாழ்வாருடைய ஆசார்யருமாக ஆகி அவரை வழி நடத்திய பெரிய நம்பியைப் பற்றிக் கூறுகிறேன். ஆளவந்தாருக்கு பல சிஷ்யர்கள் இருந்தனர்; அவர்கள் அனைவரும் சேர்ந்தே இளையாழ்வாரை சம்பிரதாயத்தின்பால் ஈடுபடுத்தினர். பெரிய நம்பி மட்டுமல்லாது, பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், மாறனேரி நம்பி, திருக்கச்சி நம்பி, திருவரங்கப் பெருமாளரையரும் இன்னும் பலரும் ஆளவந்தாருக்குச் சிஷ்யர்களாக இருந்தனர்.

வ்யாஸன், பராசரன், அத்துழாய் மூவரும்: கேட்பதற்கு  வெகு ஆவலாக இருந்தது பாட்டி. எங்களுக்குப் பெரிய நம்பியைப் பற்றியும் இளையாழ்வாரைப் பற்றியும் சொல்வீர்களா?

பாட்டி: எனக்கு அதை சொல்வதில் மகிழ்ச்சியே என்றாலும், இப்பொழுது வெளியே இருட்டி விட்டது பாருங்கள். உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்.

குழந்தைகள் ஆளவந்தாரைப் பற்றி எண்ணமிட்டவாறே குதூகலமாக தங்கள் வீடுகளுக்குக் கிளம்பிச் சென்றனர்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்: http://pillai.koyil.org/index.php/2016/07/beginners-guide-alavandhar/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/