ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – அனுஷ்டானம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< அஷ்டதிக்கஜங்கள் மற்றும் சில ஆசார்யர்கள்

பராசரன் வ்யாசன் வேதவல்லி அத்துழாய் நால்வரும் ஆண்டாள் பாட்டியின் அகத்திற்கு வருகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு பெருமாள் அமுது செய்த பழங்களைத் தருகிறேன். இந்த மாதத்தின் சிறப்பு என்னவென்று தெரியுமா?

வேதவல்லி : நான் சொல்கிறேன் பாட்டி. நீங்கள் எங்களுக்கு சொல்லியது
நினைவிருக்கிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார்
அவதரித்த மாதம் இது. ஆடி மாதம் பூரம் திருநக்ஷத்திரம் .
பராசரன் : ஆமாம். மேலும் ஸ்வாமி நாதமுனிகளின் திருப்பேரன் ஆளவந்தாரும்
இதே மாதத்தில் தான் அவதரித்தார். ஆடி மாதம் உத்திராடம் திருநக்ஷத்ரம். சரியா
பாட்டி ?
பாட்டி : மிகச்சரியாகச் சொன்னீர்கள். அடுத்ததாக தினசரி நாம் கடைப்பிடிக்க
வேண்டிய அனுஷ்டானங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
அத்துழாய் : அனுஷ்டானம் என்றால் என்ன பாட்டி ?
பாட்டி : சாஸ்த்ரம் நமக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதே
அனுஷ்டானம். உதாரணத்திற்கு நாம் அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும் என்று
சாஸ்த்ரம் விதித்துள்ளது. இதனை ஆண்டாள் நாச்சியாரும் தன் திருப்பாவையில்
நாட்காலே நீராடி என்று குறிப்பிட்டுள்ளாள்.
வியாசன் : ஆம் பாட்டி எனக்கு நினைவிருக்கிறது. திருப்பாவை இரண்டாவது
பாசுரத்தில் நாட்காலே நீராடி என்ற வரி வருகிறது.
பாட்டி : மிகச்சரி ! அதிகாலையில் நாம் எழுந்து எம்பெருமானுடைய
திருநாமங்களைச் சொல்லுவதால் மனம் தூய்மை அடையும். நற்பண்புகளும்
வளரும். மிக முக்கியமாக அதிகாலையில் நீராடிய பிறகு திருமண்காப்பை
சாற்றிக்கொண்டு உபநயனம் ஆனவர்கள் ஸந்த்யாவந்தனம் முதலான நித்ய
கர்மானுஷ்டானங்களைச் செய்தல் வேண்டும்.
பராசரனும் வ்யாஸனும் : நீங்கள் சொல்லியபடி தவறாமல் நித்ய
கர்மானுஷ்டானங்களைக் கடைப்பிடிப்போம் பாட்டி.
பாட்டி : மிக்க மகிழ்ச்சி.
வேதவல்லி : நாங்கள் திருமண்காப்பை மிகவும் விருப்பத்துடன்
சாற்றிக்கொள்கிறோம் பாட்டி. மேலும் திருமண் காப்பு சாற்றிக்கொள்வதின்
மகத்துவத்தைச் சொல்லுங்கள் பாட்டி. கேட்க ஆவலாக இருக்கிறது.

பாட்டி : சொல்கிறேன் கேளுங்கள். திருமண்காப்பு / காப்பு என்பதற்க்கு ரக்ஷை
என்று பொருள். எம்பெருமானும் , பிராட்டியும் நம்முடன் நித்ய வாஸம் செய்து
நம்மை பாதுகாக்கின்றனர். மேலும் திருமண்காப்பை சாற்றிக்கொள்வதன் மூலமாக
எம்பெருமானுக்கும் , பிராட்டிக்கும் நாம் தாஸபூதர்கள் என்பது உறுதியாகிறது.
ஆதலால் அதை சாற்றிக்கொள்ளும் பொழுது பக்தியுடனும் , பெருமையுடனும்
இருப்பது மிக அவசியமாகும் .
வேதவல்லி : திருமண்காப்பின் ஏற்றம் நன்கு விளங்கியது பாட்டி. கேட்பதற்கும்
இனிமையாக இருந்தது.
மற்ற மூவரும் ஆம் என்றனர் .
பாட்டி : மிகவும் நல்லது குழந்தைகளே. இது போல நம் நன்மைக்காக சாஸ்த்ரம்
பலவற்றை விதித்துள்ளது. அவற்றுள் சிலவற்றைக் கூறுகிறேன். கவனமாகக்
கேளுங்கள். நாம் உணவு உண்ணுவதற்கு முன்னும் பின்னும் கை கால்களை
அலம்பிக் கொண்டு தான் உணவு உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம்
தூய்மையாக இருந்தால் தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மிக
முக்கியமாக பெருமாளுக்கு அமுது செய்த ப்ரசாதத்தை மட்டுமே உட்கொள்ள
வேண்டும். நாம் உண்ணும் உணவு தான் நம்முடைய குணத்தை நிர்ணயிக்கிறது.
பெருமாளுக்கு அமுது செய்த ப்ரசாதத்தை உண்ணுவதால் அவர் க்ருபையால் ஸத்வ
குணம் வளரும்.
பராசரன் : எங்கள் அகத்தில் அம்மா செய்யும் தளிகையை எங்கள் அப்பா
திருவாராதனத்தின் பொழுது கண்டருளப்பண்ணுவார். நாங்கள் பெருமாள் தீர்த்தம்
பெற்றுக் கொண்ட பிறகே பிரசாதத்தை உண்ணுவோம்.
பாட்டி : நல்ல பழக்கம். விடாமல் கடைப்பிடிக்க வேண்டும் குழந்தைகளே.
நால்வரும் சரி பாட்டி என்றனர்.
பாட்டி : மேலும் நாம் உணவு உட்கொள்ளுவதற்கு முன் ஆழ்வார் பாசுரம் சிலவற்றை
ஸேவிக்க வேண்டும். நம் வயிற்றிற்கு உணவு எம்பெருமானுக்கு அமுதுசெய்த
ப்ரசாதம். நம் நாவிற்கு உணவு என்னவென்று தெரியுமா?
அத்துழாய் : நாவிற்கு உணவா ? என்னவென்று சொல்லுங்கள் பாட்டி
பாட்டி : ஆம் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லுவதே நாவிற்கு உணவு. மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டவர். அவர் தன்னுடைய
கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரத்தில் தென்குருகூர் நம்பி அதாவது ஆழ்வார்
திருநாமத்தைச் சொல்லும் பொழுது நாவிற்கு அமுதமாக இருக்கிறது என்கிறார்.

வேதவல்லி: மிக அழகாக விளக்கினீர்கள் பாட்டி. இனி நாங்களும் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஸேவித்தப் பிறகே உணவு உட்கொள்கிறோம். எங்கள் நாவிற்கும் உணவாகிவிடும் .

பாட்டி : மிக நல்லது வேதவல்லி
வியாசன் : நீங்கள் கூறுவதைக் கேட்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது
பாட்டி. மேலும் சொல்லுங்களேன்.
பாட்டி : நீங்கள் அடுத்த முறை வரும்பொழுது கைங்கர்யத்தின்
மேன்மையைப்பற்றிக் கூறுகிறேன். இப்பொழுது இருட்டி விட்டதால் உங்கள்
அகத்திற்குப் புறப்படுங்கள்.
குழந்தைகள் பாட்டி கூறியதை எண்ணியவாறு தங்கள் அகத்திற்குப் புறப்பட்டனர்.
அடியேன் ஸாரநாயகி ராமானுஜ தாசி

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

Leave a Comment