ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 1

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்

<< ஆளவந்தாரின் சிஷ்யர்கள் – 2

பராசரனும், வ்யாசனும், வேதவல்லி, அத்துழாய் இவர்களுடன் ஆண்டாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழைகிறார்கள்.

பாட்டி : வாருங்கள் குழந்தைகளே. உங்கள் கை கால்களை அலம்பிக் கொள்ளுங்கள். நம் கோயிலில் இன்றைக்கு நடந்த திருவாடிப்புர உத்ஸவப் ப்ரஸாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள். இன்றைக்கு, ஆன்டாள் பிராட்டியின் அன்பிற்குப் பாத்திரமான ஒருவர், அவரைத் தன்னுடைய அண்ணன் என்றே அழைத்தாள், அவரைப் பற்றி பேசலாம். அவர் யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா ?

வ்யாச : தெரியாதே பாட்டி, ஆண்டாளுடைய அண்ணன் யார்? ஆண்டாள் பிராட்டிக்கு ஓர் அண்ணன் இருந்தாரா?

பாட்டி : ஆமாம், அவர் அவளுக்கு அண்ணனே, உடன் பிறந்ததினால் அல்ல, தம்ம்டைய அன்பினாலும் பாசத்தினாலும். அவரை கோதாக்ரஜர் அல்லது கோயிலண்ணன் என்று அழைப்பார்கள், அவர் வேறு யாருமல்ல நம் ராமானுஜர் தான்! அக்ரஜன் என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு தமையன் அல்லது அண்ணன் என்று பொருள். ஆண்டாள் அல்லது கோதையே அண்ணன் என்று கொண்டதால் அவரை கோதாக்ரஜர் என்று அழைப்பார்கள். ஸ்ரீபெரும்பூதூரில் கேசவ தீக்ஷிதருக்கும் காந்திமதி அம்மங்காருக்கும் புதல்வராக இளையாழ்வார் அவதரித்தார். ஆதிஷேஷனின் அவதாரம் தான் அவர். அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் கடாக்ஷத்தினால் தோன்றியவர்.

உடையவர், உபயநாச்சியருடன் பார்த்தசாரதி பெருமாள் – திருவல்லிக்கேணி

பராசரன் : பாட்டி, ஆண்டாள் பிராட்டி ராமானுஜருக்கு வெகு காலம் முன்பே அவதரித்தவள் அல்லவா? அப்படி இருக்க அவர் எப்படி அவளுக்கு அண்ணனாக ஆக முடியும் ?

பாட்டி : நல்ல கேள்வி பராசரா. நான் சொன்னது போல் பிறப்பினால் அவளுக்கு அவர் அண்ணனாக ஆகவில்லை, தன் செயலினால் அவ்வாறாக ஆனார். ஆன்டாள் பெருமாளிடத்தில் கொண்ட தூய அன்பினால், திருமாலிருஞ்சோலை அழகர் பெருமாளுக்கு 100 தடா நிறைந்த அக்கார அடிசிலும் 100 தடா நிறைந்த வெண்ணெயையும் சமர்பிக்க விரும்பினாள். ஆனால் அக்காலத்தில் அவள் சிறிய பெண்ணாக இருந்ததினால் அதனைச் செயல்படுத்த இயலவில்லை. ராமானுஜர் நாச்சியார் திருமொழியில் உள்ள அப்பாசுரத்தை அனுசந்திக்கும் பொழுது ஆண்டாளுக்கு இருந்த ஆசையை உணர்ந்தார்.  ராமானுஜரும் ஆண்டாள் எண்ணிய வண்ணம்  100 தடா நிறைய அக்கார அடிசிலும் 100 தடா நிறைய வெண்ணெயையும் திருமாலிருஞ்சோலை அழகர் பெருமாளுக்கு சமர்ப்பித்தார். அழகருக்கு இவற்றைச் சமர்ப்பித்துவிட்டு, அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றபொழுது, ஆண்டாள் அவரை வரவேற்று அவரைக் கோயில் (ஸ்ரீரங்கத்து) அண்ணன் என்று அழைக்கிறாள். ஆகையினால் தான் அவருக்குக் கோயிலண்ணன் என்று பெயர்.  எப்பொழுதுமே அண்ணன்கள் தாம் தங்கையரின் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவர் இல்லையா, அதனால் தான் ஆண்டாள் அவரை அண்ணன் என்று அழைத்தாள்.

அத்துழாய், திருப்பாவையிலிருந்து எதாவது சில பாசுரங்களை உன்னால் சொல்ல முடியும? நீ உன் பள்ளி மாறுவேடப்போட்டியில் ஆண்டாளாக வேடமிட்டுச் சில பாசுரங்களைச் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது!

(அத்துழாய் சில பாசுரங்களைச் சொல்கிறாள்)

பாட்டி : இன்று உன்னை ஏன் பாசுரம் சொல்லச் சொன்னேன் தெரியும? ஏனென்றால், ராமானுஜரை  திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பார்கள். அவர் எக்காலத்திலும் திருப்பாவையை தினமுமே அனுசந்தித்தவர். அவர் சிறந்த அறிஞருமானதால், ராமானுஜர் மனதுக்கு மிகவும் உகந்த ப்ரபந்தம் திருப்பாவையாகும், அதனால் அவர் அதனை தினமுமே அனுசந்தித்து வந்தார். ஏன் என்று உங்களுக்கு தெரியுமா ?

வேதவல்லி : ஏனென்றால் அது கற்க எளிதானது என்பதனாலா? எனக்கு 30 பாசுரங்களுமே தெரியும்.

பாட்டி (புன்சிரித்தவாறு) : மிக நன்று வேதவல்லி. திருப்பாவை கற்க எளிதானது என்பது மாத்திரமல்ல, நம் சம்பிரதாயத்தின் மொத்த சாரமுமே இந்த 30 பாசுரங்களில் உள்ளடக்கமாகும். நம் வேதங்களில் பரக்கச் சொல்லப்பட்டுள்ள ஞானத்திற்கு நிகரானது இது. அதனால் தான் இதனை “வேதம் அனைத்துக்கும் வித்தாகும்” என்று சொல்கிறோம் – நான்கு வேதக் கருத்துக்களும் இந்த 30 பாசுரங்களில் உள்ளன.

அத்துழாய்: பாட்டி, ராமானுஜருக்குப் பல பெயர்கள் சொல்கிறீர்களே. முன்னால் நீங்கள் இளையாழ்வார் என்றீர்கள், பின்பு ராமானுஜர் என்றீர்கள், இப்பொழுது கோயிலண்ணன், திருப்பாவை ஜீயர் என்கிறீர்கள்!

பாட்டி : ஆமாம். அவர் மீது கொண்ட அன்பினால் அவருக்குப் பல பெயர்களை ஆசார்யர்கள், ஆண்டாள், எம்பெருமான் ஆகியோர் அளித்தனர். நாம் முன்னமேயே, அவருடைய பல ஆசார்யர்களையும், ராமானுஜர் வாழ்வில் அவர்களின் பங்கினையும் கண்டுள்ளோம், இப்பொழுது ராமானுஜரின் பல பெயர்களையும், அதனை அவருக்கு அளித்தவர்களையும் பற்றிப் பார்ப்போம்.

  • இளையாழ்வார் என்பது அவர் பிறந்த பொழுது அவருடைய அம்மான் (மாமா) பெரிய திருமலை நம்பி இட்ட பெயர்.
  • ஸ்ரீ ராமானுஜர் என்பது அவருக்கு மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் பொழுது பெரிய நம்பி இட்ட பெயர்.
  • யதிராஜர், ராமானுஜமுனி என்பவை ராமானுஜர் ஸந்யாஸாச்ரமம் மேற்கொள்ளும் பொழுது தேவப்பெருமாள் அளித்த பெயர்கள்.
  • உடையவர் என்பது நம்பெருமாளே அளித்த பெயர்; இதன் பொருள் இரு உலகங்களின் சொத்துக்களுக்கும் ராமானுஜரும் உடையவர் என்று பொருள்.
  • லக்ஷ்மணமுனி என்ற பெயரளித்தவர் திருவரங்கப் பெருமாள் அரையர்.
  • தம்மிடம் திருக்கோஷ்டியூரில் சரணடைந்த அனைவர்க்கும் ராமானுஜர் நம் சம்பிரதாயத்தின் பரந்த கருத்துக்களை அளித்தபொழுது அவருக்கு திருக்கோஷ்டியூர் நம்பி அளித்த பெயர் எம்பெருமானார்; ராமானுஜரின் காருண்யத்தினால் ஈர்க்கப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி “நீர் அந்த எம்பெருமானிலும் கருணை பொருந்தியவராகையால் எம்பெருமானார் – எம்பெருமானையுமே காட்டிலும் இரக்கம் மிகுந்தவர்” என்று கூறி அவருக்கு எம்பெருமானார் என்ற பெயரிட்டழைத்தார்.
  • அவருக்குச் சடகோபன் பொன்னடி என்ற பெயரளித்தவர் திருமாலையாண்டான்.
  • ஆண்டாள் அவரை கோயிலண்ணன் என்றழைத்ததை இப்பொழுது நாம் கண்டோம்.
  • ஸ்ரீ பாஷ்யகாரர் என்ற பெயரிட்டவர் காஷ்மீரத்தின் ஸரஸ்வதி தேவி.
  • பூதபுரீசர் என்ற பெயரளித்தவர் ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவப் பெருமாள்.
  • தேசிகேந்த்ரர் என்ற பெயரளித்தவர் வேறு யாருமல்ல; நம்முடைய திருவேங்கடமுடையானே.

ஆக சுருங்கச்சொல்லின், பல ஆசார்யர்கள் அன்போடு ராமானுஜருக்கு நம் சம்பிரதாயத்தின் உயர்ந்த கருத்துக்களை உபதேசித்து ஆளவந்தாருக்குப் பின்பும் நம் சம்பிரதாயம் ராமானுஜர் வாயிலாக செழிக்க வழிவகுத்தனர்.  அவரை ஆளவந்தாரின் எண்ணப்படி முதலில் ஸ்ரீவைஷ்ணவத்தின்பால் ஈர்த்தவர் திருக்கச்சி நம்பி; பிறகு அவருக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்து உபதேசம் செய்தவர் பெரிய நம்பி; திருவாய்மொழியின் ஆழ்ந்த கருத்துக்களை முழுதுமாக உபதேசித்தவர் திருமாலையாண்டான்; நம் சம்பிரதாயத்தின் சாரத்தைக் கற்றது திருவரங்கப்பெருமாளரையரிடம்; சரம ச்லோகம் கற்றது திருக்கோஷ்டியூர் நம்பியிடம்; இறுதியாக ஸ்ரீ ராமாயணத்தின் முழுக்கருத்துக்களையும் கற்றறிந்தது அவருடைய அம்மானான பெரிய திருமலை நம்பியிடமிருந்து. ஆக, ஆளவந்தாரின் சிறந்த 6 சிஷ்யர்களும் ஆசார்யர் நியமித்த கடமையைச் சரிவரச் சிறப்பாகச் செய்தனர்.

ராமானுஜர் – ஸ்ரீபெரும்புதூர்

வேதவல்லி : பாட்டி, ஆளவந்தாரைப் பற்றி நீங்கள் சொல்லும்பொழுது, ராமானுஜரால் அவருடைய சிஷ்யராக ஆக முடியவில்லை ஆனால் அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவதாக ஊறுதி கொண்டார் என்று சொன்னீற்கள். அவை என்ன? ஆளவந்தாருக்கு ஆசைகள் இருந்தன என்று  ராமானுஜர் எவ்வாறு அறிந்தார்?

பாட்டி : நல்ல கேள்வி. ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆளவந்தார் சொல்ல, பெரிய நம்பி காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டார். பெரிய நம்பி ராமானுஜருடன் ஸ்ரீரங்கத்திற்கு வந்தடையும் பொழுதோ, அவர் இவ்வுலகை விட்டுப் பரமபதத்திற்குப் புறப்பட்டு விட்டார். ஸ்ரீரங்கத்தை அடைந்த பின்புதான் பெரிய நம்பியும் ராமானுஜரும் அதனைத் தெரிந்து கொண்டனர். ராமானுஜர் ஆளவந்தாருடைய திருமேனியை (திவ்ய உடல்) காணும் பொழுது, அவருடைய ஒரு கரத்தில் மூன்று விரல்கள் மடிந்திருப்பதனைக் கவனித்தார். அது என்னவென்று அவர் கேட்க, ஆளவந்தருடைய சிஷ்யர்கள் அவருடைய ஈடேறாத ஆசைகள் சில இருந்ததனைக் கூறினர். உடன் ராமானுஜர் எடுத்துக் கொண்ட உறுதிகளாவது:

  • வ்யாசர் மற்றும் பராசர ரிஷியினிடத்தில் நம் நன்றியினைத் தம் காலத்தில் நிறுவுதல்.
  • நம்மாழ்வாரிடத்தில் தம் அன்பையும் நன்றியினையும் தம் காலத்தில் வெளிப்படுத்துதல்.
  • வ்யாசரின் ப்ரஹ்ம சூத்திரத்திற்கு ஒரு பாஷ்யம் (உரை) எழுதுதல், ராமானுஜர் தம் பிரதம சிஷ்யரான கூரத்தாழ்வானின் உதவியுடன் எழுதிய இந்த க்ரந்தத்தைதான் ஸ்ரீபாஷ்யம் என்று வழங்குகிறோம். இந்தக் க்ரந்ததத்தை இயற்றுவதற்காகவே அவர் கூரத்தாழ்வானுடன் காஷ்மீரத்திற்கு ப்ரயாணம் மேற்கொண்டார்.

ராமானுஜர் இம்மூன்று உறுதிகளை எடுத்துக்கொண்டவுடனே, ஆளவந்தாருடைய மடிந்திருந்த விரல்கள் நேராகின. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய சிஷ்யர்கள் வியப்புக்குள்ளாகி நம் சம்பிரதாயத்திற்குக் கிட்டிய அடுத்த ஆசார்யர் என்று ராமானுஜரைப் போற்றினர்.  ஆனால், ஆளவந்தருடைய மறைவுத் துயரில் மூழ்கியிருந்த ராமானுஜரோ ஸ்ரீரங்கநாதனை சேவிக்கக்கூடச் செல்லாமல், உடன் காஞ்சிபுரத்திற்குப் புறப்பட்டார்.

வ்யாச : ஆனால் பாட்டி, ராமானுஜரின் உறுதிகளினால்  ஆளவந்தருடைய விரல்கள் நேராக ஆனது போல நடக்குமா என்ன?

பாட்டி: வ்யாசா, ராமானுஜருக்கும் ஆளவந்தாருக்கும் இருந்த பிணைப்பு இந்த உலகத்தின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் மனத்தாலும் ஆத்மாவினாலும் இணைந்திருந்தனர். ஆளவந்தார் ராமானுஜரிடம் தம் மூன்று அவாக்களைச் சொன்னாரா என்ன? இருந்தும் ராமானுஜர் ஆளவந்தாருடைய மூன்று அவாக்களைக் குறித்து உறுதி மேற்கொண்டார். இது எவ்வாறு நடக்கும்? இவ்வாறான பிணைப்பு அவ்விருவரிடம் இருந்தது வ்யாசா. இது எது போன்றது தெரியுமா? ராமானுஜர் தம் மனத்தில் கொண்டிருந்த சந்தேகங்களை அவரிடம் ராமானுஜர் வெளிப்படுத்தாத நிலையிலும் தேவப் பெருமாள் அவருக்குத் தெளிவு படுத்தியது போலேதான் இதுவும். இவ்வாறன உறவுகள் மனம் ஆத்மா மூலமாக ஏற்படுவதேயன்றி தேஹத்தினால் அல்ல. இப்படிப்பட்ட சம்பந்தத்தைத்தான் ஆளவந்தாரும் ராமானுஜரும் கொண்டிருந்தனர்.

இதுவரை நாம் ராமானுஜரைப் பற்றியும் அவருடைய ஆசார்யர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். நாளை நான் அவர் எவ்வாறு அவர் ஒரு சிறந்த ஆசார்யராக விளங்கினார் என்றும் அவருடைய பாதையில் அவரை வந்தடைந்த பல சிஷ்யர்களைப் பற்றியும் உங்களுக்குச் சொல்கிறேன்.

அடியேன் கீதா ராமானுஜ தாசி

ஆதாரம்:  http://pillai.koyil.org/index.php/2016/08/beginners-guide-ramanujar-1/

வலைத்தளம் – http://pillai.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org/

1 thought on “ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ராமானுஜர் – பகுதி – 1”

Leave a Comment